வடகிழக்கு பருவமழை குறித்து முன்னேற்பாடு பணி கூட்டம்
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், கோட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், தங்கள் உட்கோட்டத்தில் பல்துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.தற்காலிக நிவாரண முகாம்களை முழுமையாக தணிக்கை செய்து தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். புதியதாக பாதிக்கப்படக்கூடிய பகுதி ஏதும் கண்டறியப்பட்டால், அவற்றின் விபரங்களை தெரியப்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,'' என்றார். ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகமதுஷபீர் ஆலம், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீர் சுதாகர், துணை கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.