கர்நாடகா எல்லையில் கோவில் திருவிழா 150 அடி தேர் சாய்ந்து ஒருவர் பரிதாப பலி
ஓசூர்: கர்நாடகா எல்லையில், அம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தின் போது, இரு தேர்கள் சாய்ந்து விழுந்ததில், பக்தர் ஒருவர் பலியானார்; 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் பகுதியிலுள்ள ஹூஸ்கூர் கிராமத்தில், பழமையான மத்துாரம்மா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அப்போது, பல்வேறு கிராமங்களில் இருந்து, 120 முதல், 150 அடி உயர, 7 பிரமாண்ட தேர்கள் அலங்கரிக்கப்பட்டு, டிராக்டர் மற்றும் காளைகளை கொண்டு இழுத்து வரப்படும். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நேற்று நடந்தது. அதையொட்டி, தொட்டநாகமங்கலா, ராயசந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து, இரு தேர்களை டிராக்டரில் வைத்து, மாடுகளை பூட்டி இழுத்து வந்தனர்.நேற்று மாலை பலத்த காற்று வீசியதில், 150 அடி உயர, இரு தேர்களும் சாய்ந்து விழுந்ததில், லோஹித் என்பவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஹெப்பகோடி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்தாண்டு, 127 அடி உயர தேர் ஹீலலிகே பகுதியில் சாய்ந்து விழுந்தது. அப்போது பக்தர்கள் காயமின்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.