காலை உணவு திட்டத்தில் பள்ளிகளில் ரகசிய ஆய்வு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட உணவை கலெக்டர் தினேஷ்குமார் சாப்பிட்டு, உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,441 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 8 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. அதன்படி கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவு ஆய்வு செய்யப்பட்டது. இப்பள்ளியில், 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமாகவும், சுவையாகவும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் காலை உணவு வழங்கப்படும் பள்ளிகளுக்கு, ரகசிய ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளது,” என்றார்.பி.டி.ஓ.,க்கள் உமாசங்கர், சிவபிரகாசம், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.