மா மரங்களில் கல்தார் உபயோகிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்்
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், வேளாண்மை இணை இயக்குனர் காளிமுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தோட்டக்கலை இணை இயக்குனர் இந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், விவசாயிகள் பேசுகையில், 'கல்தார்' தொழில்நுட்பத்தால் 'மா' விவசாயம் பாதிக்கப்படுகிறது. வயதான மா மரங்களில் இருந்து அதிக மகசூல் பெறவும், பருவமில்லாத காலங்களில் மாங்காய் அறுவடை செய்யவும் பயன்படுகிறது. இந்த வேதிப்பொருள் 'மா' சாகுபடியில் பலன்களை தந்தாலும், பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.மேலும், ஊர்நத்தம் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். படேதலாவ் பெரிய ஏரியின் மதகை சீரமைத்து தர வேண்டும். 60 வயதான அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சந்தனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட நாராயணராவ் ஏரியை பழுதுபார்க்க வேண்டும். டான்வா மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வேண்டும். அத்திப்பள்ளம் ஏரி கால்வாய் பகுதியை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர் தினேஷ்குமார், 'விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். சில கோரிக்கைகள் அரசின் கருத்துருக்காக அனுப்பப்படும்,' என்றார். எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியியல் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாதேவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜான்லுார்து சேவியர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.