உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.7 கோடியில் அமைத்த பழங்குடியினர் அருங்காட்சியகம் பவானிசாகர் அருகே திறப்பு விழா காணாமலே முடக்கம்

ரூ.7 கோடியில் அமைத்த பழங்குடியினர் அருங்காட்சியகம் பவானிசாகர் அருகே திறப்பு விழா காணாமலே முடக்கம்

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் வனப்பகுதியில், 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பழங்குடியினர் அருங்காட்சியகம், திறப்பு விழா காணாமலே முடங்கியுள்ளது. பழங்குடியினர் சிலை உள்ளிட்டவை வீணாகி வருகிறது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் காராச்சிக்கொரை வனத்துறை சோதனை சாவடி அருகே, 7 கோடி ரூபாய் மதிப்பில், பழங்குடியினர் சூழல் கலாச்சார மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க, 2018ல் அப்போதைய தமிழக அரசு, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்காக, 20 ஹெக்டேரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 2018ல் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கின. இங்கு தோடர், கோத்தர், குரும்பர், பளியர், இருளர் உள்ளிட்ட பழங்குடியினரின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதிரி கிராமம் அமைத்து, அவர்களது வாழ்வியல் முறை, உணவு பழக்கவழக்கம், விவசாயம், வீடு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டது. மேலும் பழங்குடியினரின் மருத்துவ வழிமுறை, பயன்படுத்தும் இசை கருவி மற்றும் பழங்குடியின கிராம மக்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, கண்டு களிக்கும் வகையில் சூழல் கலாசார மையம் அமைக்கப்பட்டது. பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் தாவரங்களை கொண்டு இயற்கை சார்ந்த நில அமைப்பு மற்றும் அருங்காட்சியகம் மற்றும் கலாசார கிராமத்தின் சிறந்த மேலாண்மைக்கு தேவையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பணி நடந்தது. கடந்த, 2020ல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வனத்துறையினரின் அலட்சியத்தால், இதுவரை பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பு விழா காணாமல் ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளது.இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது: பழங்குடியினரின் வாழ்வியல் முறையை தெரிந்து கொள்ள அமைக்கப்பட்ட கலாசார அருங்காட்சியகம், தற்போது முட்புதர் மண்டி, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் உள்ளது. சிலைகள் உடைந்தும், பழங்குடியின குடில்கள் சேதமடைந்தும் கிடக்கிறது. கட்டடங்களும் வீணாகி வருகிறது. அருங்காட்சியகத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து சத்தி புலிகள் காப்பக இணை கள இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷ் கூறுகையில், ''பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தை வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் அண்மையில் பார்வையிட்டு விரைவில் சீரமைக்க உத்தரவிட்டார். இதற்கு தேவையான நிதியை அரசிடம் கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கியவுடன் புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம் அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி