உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை அருகே காட்டாற்று வெள்ளம் திருப்பத்துார் - சிங்காரப்பேட்டை சாலை துண்டிப்பு

ஊத்தங்கரை அருகே காட்டாற்று வெள்ளம் திருப்பத்துார் - சிங்காரப்பேட்டை சாலை துண்டிப்பு

ஊத்தங்கரை:திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையில் கனமழை காரணமாக மாம்பாக்கம், சிம்மனபுதுார் அருகே உள்ள ஓட்டேரி அணை நிரம்பி உபரி நீர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எல்லை பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நேற்று அதிகாலை திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தால் ஊத்தங்கரை அடுத்த எக்கூர், ஆண்டியூர், மகனுார்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வயல் வெளிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மகனுார்பட்டியில் மேம்பாலம் பணி நடந்து வருவதால், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து இயங்கி வந்தது. ஆனால், அதிகாலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பத்துார் - -சிங்காரப்பேட்டை பிரதான சாலை முழுதுமாக துண்டிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று வழியில் செல்கின்றனர். வெள்ள நீர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஊத்தங்கரை தாசில்தார் திருமால், டி.எஸ்.பி., சீனிவாசன், பி.டி.ஓ., பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். எக்கூர், ஆண்டியூர் பகுதிகளில், 100 ஏக்கர் பயிர்கள் சேதமானது. எக்கூர் பகுதியில் மூன்று வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். திடீர் வெள்ளம் காரணமாக, எக்கூரில் நுாற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் வாழை குலைகளை உடனடியாக விற்பனைக்கு அனுப்பினர்.ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் அருகே, ஜவ்வாது மலையில் உள்ள அங்குத்தி சுனை நீர் வீழ்ச்சியில் அதிக நீர்வரத்து காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது:திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையில் அதிக நீர்வரத்து காரணமாக வரும் உபரி நீர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அருகே உள்ள எக்கூர், ஆண்டியூர், மகனுார்பட்டியில் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக, அந்தந்த பகுதி ஏரிகளுக்கு சென்று உபரி நீர் பாம்பாறு அணையில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், உபரி நீர் விவசாய நிலங்களில் உள்புகுந்து பயிர்கள் நாசமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நீர் வரத்து கால்வாய்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறினர்.அதிக நீர் வரத்தால், ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,100 கன அடிநீர் வருவதால், அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை