கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 538 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 702 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து பாசன கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 414 கனஅடி என மொத்தம், 593 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 47.95 அடியாக நீர்மட்டம் இருந்தது. பாரூர் ஏரி மொத்த கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 48 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. சூளகிரி, சின்னாறு அணை மற்றும் ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்து இல்லை. நேற்று காலை, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதிகளில், 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.