| ADDED : மே 03, 2024 05:51 AM
திருப்பரங்குன்றம்: மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வயல்களில் பயிர்கள் கருகுவதை தடுக்கும் வழிமுறை குறித்து வேளாண் துறை வழிமுறைகளை அறிவித்துள்ளது.திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: விதைப்பதற்கு முன்பு விதைகளை 100 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து, பின்பு நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.பயிர்கள் உள்ள நிலங்களில் சோளத்தட்டை, கரும்புத்தட்டை வைக்கோல் போன்றவற்றை கொண்டு பயிர் இடைவெளிகளில் மூடுவதன் மூலம் மண்ணில் உள்ள ஈரம் விரைவில் ஆவியாவதை தடுக்கலாம். சைகோசெல் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி அளவில் கலந்து தெளிக்கலாம். களிமண் வகையை சேர்ந்த கயோலினைட் என்ற பொருளை (3 சதவீதம்) 100 கிலோ தண்ணீரில் 3 கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அல்லது பொட்டாசியம் குளோரைடு மருந்து ஒரு கிலோவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியில் இருந்து ஓரளவு காப்பாற்ற முடியும்.பி.பி.எப்.எம்., என்ற மெதிலோ பாக்டீரியம் வகை திரவ நுண்ணுயிர், வளர் சிதை மாற்ற வினை மூலம் பயிருக்கு வறட்சி தாங்கும் திறனை அதிகரிக்கிறது. அதை ஒரு லிட்டர் தண்ணீரில் 10 முதல் 20 மில்லி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். அல்லது காலை, மாலையில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம் என்றார்.