உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலை நீதிமன்றத்திற்குள் தகராறு எட்டு பேர் மீது வழக்கு

உசிலை நீதிமன்றத்திற்குள் தகராறு எட்டு பேர் மீது வழக்கு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நீதிமன்றத்திற்குள் தகராறு செய்த எட்டு பேர் மீது, அலுவலக உதவியாளர் பால்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அவர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எழுமலை உத்தப்புரத்தைச் சேர்ந்த ஒய்யணன் மற்றும் அழகுமணி ஆகியோருக்கிடையே கடந்த 2022 ல் நடந்த தகராறு தொடர்பான வழக்கு உசிலம்பட்டி நீதிமன்றம் எண் 2ல், நடக்கிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது ஒய்யணன், மாரிமுத்து, செல்வம், திருப்பதி, தவமணி, முருகேசன் ஆகிய 6 பேர், எதிர்தரப்பினர் அழகுமணி, ராமகிருஷ்ணன் என மொத்தம் 8 பேர் ஆஜராகினர்.நீதிமன்ற வளாகத்தில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இருதரப்பினரும் கையாலும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் மாரிமுத்து தனது சட்டையில் தீ வைத்துக்கொண்டு அனைவரையும் எரித்து கொன்று விடுவேன் என மிரட்டினார். 15 நிமிடங்கள் நீதிமன்ற பணியை பாதிக்கச் செய்து, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். உசிலம்பட்டி போலீசார் 8 பேர்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை