| ADDED : ஜூலை 09, 2024 05:25 AM
மதுரை: ''பார்லிமென்டில் செங்கோல் வைத்திருப்பதை அவமதித்த மதுரை எம்.பி., வெங்கடேசனை கைது செய்ய வேண்டும்'' என ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர். மதுரையில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூக நலத்திட்ட பாதுகாப்பு அலுவலர் சங்கீதா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆலயப் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் அளித்த மனு: எம்.பி., வெங்கடேசன் ஹிந்து சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பால் பேசி வருகிறார். இதனால் துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் புகார் அளித்து வருகின்றனர். வெங்கடேசனின் விஷம பேச்சுகள், மதகலவரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.* வண்டியூர் கண்மாயில் முன்பு இருந்ததை போல மேலமடை முதல் பாண்டிகோயில் வரை 5 இடங்களில் படித்துறை அமைக்க வேண்டும் என மேலமடை மக்கள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.* வாவிடமருதுார் மாலைப்பட்டி சீமான் அளித்த மனு:நான் மாற்றுத் திறனாளி. எனது வீடு உள்ள பகுதியில் இடத்தை அளந்த சர்வேயர் பொது நடைபாதையில் கல்லை நட்டு கம்பி வேலி அமைத்தார். மேற்கு ஒன்றியம் சார்பில் அமைத்த ரோட்டில் இதை செயல்படுத்தியுள்ளனர். இந்த ரோட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய பணிகள் உட்பட பலவற்றுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.