| ADDED : ஜூலை 18, 2024 06:23 AM
மதுரை, : தனது தரப்பு கட்சிக்காரர் சார்பில் வழக்கறிஞர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருவதற்கு சட்டப்படி குறிப்பிட்ட தடை இல்லையெனில், கோரப்பட்ட தகவலை மறுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி தாக்கல் செய்த மனு:தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ் சில தகவல்கள் கோரி மாநில பொது தகவல் ஆணையம், சென்னை மத்திய நில அளவை அலுவலக பொது தகவல் அலுவலருக்கு அனுப்பினேன். தகவல் அளிக்கப்படவில்லை. எனக்கு தேவையான தகவல்களை 30 நாட்களில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு மத்திய நில அளவை அலுவலக பொது தகவல் துணை இயக்குனர் அனுப்பினார். பதில் இல்லை. எனது விண்ணப்பம் மற்றும் மேல்முறையீடு அடிப்படையில் தகவல்களை அளிக்க மாநில பொது தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன்: ஒரு வழக்கில்,'குடிமகன் என்ற அடிப்படையில் மனுதாரர் தனிப்பட்ட முறையில் தகவல் கோரலாம்.ஆனால் தனது கட்சிக்காரர் சார்பில் வழக்கறிஞர் தகவல் கோர முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என 2017 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்முடிவிற்கு எந்த அடிப்படையும் இல்லை. அம்முடிவை சட்டப்படி அனைத்திற்கும் பொதுவாக பொருந்தும் வகையில் பயன்படுத்த முடியாது. தனது தரப்பு கட்சிக்காரர் சார்பில் வழக்கறிஞர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருவதற்கு சட்டப்படி குறிப்பிட்ட தடை ஏதும் இல்லையெனில், கோரப்பட்ட தகவலை மறுக்க முடியாது.இம்மனு 2018 ல் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரருக்கு தற்போது 79 வயது. அவருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் அலுவலக பொது தகவல் அலுவலர் முடிந்தவரை விரைவாக தகவல்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.