UPDATED : ஏப் 25, 2024 03:51 PM | ADDED : ஏப் 25, 2024 12:51 AM
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப விமோசனம் வழங்கிய அழகர், தசாவதார நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார். அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் எழுந்தருளினார்.தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கினார். நேற்று காலை 9:00 மணிக்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதியம் 3:00க்கு மேல் 4:00 மணிக்குள் கருடவாகனத்தில் வைகையாற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் எழுந்தருளிய அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின், ராமராயர் மண்டபத்திற்கு திரும்பினார். நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் புறப்படுவார். நாளை அதிகாலை 2:30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருள்வார்.