| ADDED : ஜூலை 29, 2024 06:46 AM
மதுரை : 13 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணியாற்றும் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்'' என, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கட்டுப்போடுதல், நோயாளிகளுக்கான சீட்டு எழுதிக் கொடுப்பது, கழிவறை, வார்டை பராமரிப்பது, துாய்மைப் பணி என 13 வகையான பணிகளை இவர்கள் செய்கின்றனர்.மதுரை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் பணியாற்றுகின்றனர். மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் இவர்கள் இல்லை. மற்ற மாவட்டங்களில் எல்லா நிலைகளிலும் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் தினமும் ரூ.700 ஊதியமாக பெறுகின்றனர். இதனை மாற்றி தங்களுக்கும் கால முறை ஊதியம் தந்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என போராடி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை முதன்மை செயலாளர் அளவில் ஏற்கப்பட்டும், அதுபற்றிய கோப்புகள் நிலுவையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.தற்போது இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் கூறுகையில், ''இன்று (ஜூலை 29) மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், ஆக.21 ல் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டமும் நடத்த உள்ளோம்'' என்றார்.