| ADDED : ஜூன் 19, 2024 02:17 AM
மதுரை:அந்தியோதயா ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருப்பது போல நடித்த, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன், 30, சிக்கினார். தாம்பரம் - நாகர்கோவில் இடையேயான விரைவு ரயிலில் திருச்சி -- திண்டுக்கல் இடையே வந்த போது, முன்பதிவு பெட்டி ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் போல ஒருவர் பயணியரிடம் பரிசோதிக்கும் விதமாக அங்குமிங்கும் சென்றார். அதே பெட்டியில், மதுரையைச் சேர்ந்த பெண் ரயில் டிக்கெட் பரிசோதகர் தன் குடும்பத்தினருடன் பயணித்தார். அவருக்கு அந்த டிக்கெட் பரிசோதகர் மீது சந்தேகம் எழுந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த விருதுநகர் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் விசாரித்த போது, மணிகண்டன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகம் வலுத்தது. அடையாள அட்டை உள்ளிட்ட முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை; போலி அடையாள அட்டை வைத்திருந்தார்.இதற்கிடையில் ரயில், மதுரை நிலையத்தை நெருங்கியதால் அவர் மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் பாதுகாப்பு படையினர், அவரிடம் விசாரித்தனர்.அவர், பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், எதற்காக டிக்கெட் பரிசோதகர் போல செயல்பட்டார் என விசாரணை நடக்கிறது. திண்டுக்கல் அருகே அவர் பிடிக்கப்பட்டதால் அம்மாவட்ட ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.