| ADDED : மே 07, 2024 05:32 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி விவசாயிகளை ஊக்குவிக்க நீண்ட கால பயிர் சாகுபடி திட்டம் அல்லது மானியத்துடன் கடன் வழங்கி மாற்றுத் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.திருப்பரங்குன்றத்தை சுற்றி தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. அதிகளவு மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி கண்மாய்கள் நிரம்பும். இக்கண்மாய்களின் தண்ணீர் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் முழுமையாக நிரம்பினால் மட்டுமே ஒரு போகம் நெல் விவசாயம் செய்ய முடியும். இல்லையெனில் மாடுகளுக்கு சோளம் விதைக்கின்றனர். கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருப்பவர்கள் காய்கறிகள் பயிரிடுகின்றனர்.கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் இல்லை. பலர் நிலங்களை விற்று விட்டு விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மழையை நம்பி நெல் நாற்று பாவி விடுகின்றனர். போதுமான மழை பெய்யவில்லையெனில் நாற்றுக்களை பாதி விலைக்கு விற்கும் நிலையும் ஏற்படுகிறது. விற்பனையாகாமல் முற்றிய நாற்றுகள் மாடுகளுக்கு உணவாகிறது. ஆண்டுதோறும் நஷ்டம் அடைகின்றனர்.மானாவாரி விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் இந்த மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் வருவதற்கு விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும். முழு மானியத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், குறுகிய கால பயிர்கள் பயிரிட வசதியை ஏற்படுத்த வேண்டும். மானாவாரி விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை நல்ல விலைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் முழு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி கறவை மாடுகள், ஆடுகள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.