| ADDED : மே 30, 2024 08:29 PM
மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் சீனியர் துணைப் பதிவாளர்கள் உட்பட 15 பேர் நேற்று ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு எவ்வித பணப்பலனும் கிடைக்காததால் கண்ணீருடன் விடை பெற்றது நெகிழ வைத்தது.இப்பல்கலை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. துணைவேந்தர் பணியிடமும் காலியாக உள்ளது. பல்கலை விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணயம் செய்து குறைத்ததால், 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பாதித்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் பழைய சம்பளம் வழங்க உத்தரவு பெற்றும் இன்னும் கிடைத்தபாடில்லை.இந்நிலையில், சீனியர் துணை பதிவாளர்கள் சிவகுருநாதன், செல்வி, பி.ஆர்.ஓ., பாண்டியராஜன், உதவி பதிவாளர் அருண் உட்பட 15 பேர் நேற்று ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர். ஓய்வு பெறுவோருக்கு வழக்கமாக, 90 சதவீதம் பணப் பலன்கள் அன்றைய நாளில் வழங்கப்படும். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக 15 பேருக்கும் ஒரு ரூபாய் கூட பணப்பலன் வழங்கப்படவில்லை.சம்பள மறுநிர்ணயம் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவு பல்கலைக்கு வரவில்லை என்பதால், கடந்த 5 மாதங்களாக இவர்கள் 15 பேருக்கும் சம்பளமும் கிடைக்கவில்லை. சீனியர் துணைப் பதிவாளர்கள் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள நிலையில், குடும்ப உறுப்பினர்களுடன் பணிநிறைவு விழாவில் பங்கேற்று, பணப் பலனின்றி, கண்ணீருடன் வெளியேறியது அனைத்து அலுவலர்களையும் நெகிழ வைத்தது.