உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓராண்டில் 53 உடல்கள் தானம் பெற்று மதுரை மருத்துவக் கல்லுாரி சாதனை

ஓராண்டில் 53 உடல்கள் தானம் பெற்று மதுரை மருத்துவக் கல்லுாரி சாதனை

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரை 53 உடல்கள் தானமாக பெறப்பட்டு புதிதாக துவங்கப்பட்ட பிற அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாதனை குறித்து நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் கூறியதாவது: உயிருடன் இருக்கும் போது உடல் தானம் தருவதாக சான்றிதழ் பெற்றவர்கள் மூலம் 6 உடல்கள் தானமாக பெற்றோம். மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவுப் படி ஆதரவற்ற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் இறக்கும் நோயாளிகளின் உடல்களை அந்தந்த எல்லை போலீசாரின் ஒப்புதல் கடிதம் மூலம் பெறுகிறோம்.இங்கு தினமும் விபத்திலோ, உடல்நலம் குன்றியோ 5 முதல் 10 பேர் வார்டில் சேர்க்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இறக்கின்றனர். 3 நாட்கள் மார்ச்சுவரியில் உடல் பாதுகாக்கப்படும்.உறவினர்களை போலீசார் கண்டறிந்த பின் அவர்கள் இறுதிச் சடங்கு செய்ய விரும்பாமல் எங்களிடமே உடலை ஒப்படைக்கின்றனர். இந்த முறையில் 2023 ஜூன் முதல் டிச., வரை 23 உடல்கள் பெறப்பட்டன. இந்தாண்டு ஜூன் வரை 30 உடல்கள் பெற்றோம். தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 3 அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் படிப்புக்காக உடல்களை வழங்கியுள்ளோம். உடல்களை ஒப்படைக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தற்போது சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறோம். இங்குள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் படிப்புக்காக 20 உடல்கள் ஆண்டுதோறும் தேவைப்படும். தேவை போக மற்றவற்றை புதிய கல்லுாரிகளுக்கு அனுப்பி சேவை செய்கிறோம். மதுரை மார்ச்சுவரியில் 34 உடல்களை பாதுகாக்கும் வசதியுள்ளது. கூடுதலாக 24 உடல்களை பாதுகாக்கும் வகையில் ரூ.40 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரி மற்ற மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ