| ADDED : மே 26, 2024 04:26 AM
மதுரை: ஆண்டுக்கு 150 கிலோ பனை சர்க்கரை தரும் பனைமரத்தை பண மரமாக பார்க்க வேண்டும்'' என, மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் நடக்கும் பனைஓலை உயிரோவிய கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.மிராக்கிள் ட்ரீலைப் சயின்ஸ், மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சங்க வளாகத்தில் பனை ஓலையில் உயிர் ஓவிய கண்காட்சி, பனை ஓலை சித்திர பயிற்சி விழா நேற்று தொடங்கியது.சங்கத் தலைவர் ரத்தினவேலு, துணைத்தலைவர் சுரேஷ்குமார், மிராக்கிள் ட்ரீ நிறுவனர் சரவணகுமரன்கலந்து கொண்டனர். வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தரராஜ் பேசியதாவது: மனிதர்களுக்கு அதிக பயன் தரும் ஒரே மரம் பனை தான். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மாநில மரமாகவும் போரில் வெற்றி அடைந்தவர்கள் பனை பூவை அலங்கரித்து கொள்ளும் பழக்கமும் இருந்துள்ளது. உலகில் மூத்தகுடி தமிழ்க்குடி, மூத்தமொழி தமிழ் என்பதைப் போல் பண்பாட்டு ஆணிவேராக பனைமரம் இருந்ததை ஓலைச்சுவடிகள் மூலம் அறியலாம். நாகரீகத்தை வளர்ப்பதற்கு ஆதாரமாக பனைமரம் இருந்துள்ளது.பனைமரம் ஒன்றில் இருந்து ஆண்டுக்கு 150 கிலோ அளவு பனை சர்க்கரை எடுக்கமுடியும். சில நுாறு பனைமரங்கள் வளர்த்தால் லட்சாதிபதியாகிவிடலாம் என்பதால் அவற்றை பணமரமாக பார்க்க வேண்டும். ஒன்பது ஆண்டுகளில் பலன் தரும் பனைமரங்களும் கிடைப்பதால் கிராமத்திற்கு 5000 பனை மரங்கள் நட்டு பராமரித்தால் அந்த கிராமமே தன்னிறைவு பெற்றதாகி விடும். மனிதர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு பனைமரமே ஆதாரம் என்றார்.பனை ஓலையை பதப்படுத்தி அதில் வரையப்பட்ட பல்வேறு உயிரோவியங்களின் விற்பனை கண்காட்சி இடம்பெற்றது. மே 29 வரை தினமும் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.அனுமதி இலவசம். மேலும் பனை ஓலையை வெட்டி அதில் வண்ண ஓவியங்கள் வரைவதற்கான பயிற்சி 6 நாட்கள் நடக்கிறது.