மதுரை : மதுரை மாநகராட்சியில் நீட், பொதுத் தேர்வுகள், சதுரங்க போட்டிகளில் சாதித்த மாணவர்கள் 560 மாணவர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் பரிசு வழங்கி பாராட்டினர்.கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. சுந்தரராஜபுரம், வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு அரசின் இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா மேயர் தலைமையில் நடந்தது.கமிஷனர் முன்னிலை வகித்தார். மாணவிகள் பூங்கொத்து கொடுத்து மேயரை வரவேற்றனர். 1959 மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடப்புத்தகங்களை வழங்கினர். மேலும் மாணவர்களுக்கான ஆதார் திருத்தம் முகாமை பார்வையிட்டனர்.நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ரக் ஷனாவிற்கு ரூ.3 ஆயிரம், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஹரிணி, ஸ்ரீதேவிக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பெற்ற சங்கீதாவிற்கு ரூ.2 ஆயிரம், 'சென்டம்' மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரம், இதுபோல் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மாநில சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சஹானா உள்ளிட்டோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 100 சதவீதம் தேர்ச்சி, பாடம்வாரியாக 'சென்டம்' பெற்றது உட்பட 560 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா, மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, கல்விகுழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன், கவுன்சிலர் ஜென்னியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.