முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
மதுரை : பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப். 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான 27 விளையாட்டுகள் 53 வகையாக மாவட்ட, மண்டல, மாநில அளவில் செப்டம்பர், அக்டோபரில் நடத்தப்படுகிறது. 12 முதல் 19 வயது பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது கல்லுாரி மாணவர்களுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள்டென்னிஸ், வாலிபால், ஹேண்ட்பால், கேரம், செஸ், கோகோ போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளி, கல்லுாரிகளுக்கான பீச் வாலிபால், டென்னிஸ், பளு துாக்குதல், வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை போட்டிகள் நேரடியாக மண்டல அளவில் நடைபெறும். பள்ளி, கல்லுாரிகளுக்கான டிராக் சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நேரடியாக மாநில அளவில் நடத்தப்படும்.15 முதல் 35 வயதுக்குட்பட்ட பொதுமக்கள் பிரிவில் தடகளம், இறகுபந்து, கிரிக்கெட், கபடி, வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்ப போட்டிகள் நடக்கின்றன. அரசு ஊழியர்கள் தடகளம், இறகுபந்து, செஸ், கபடி, வாலிபால், கேரம் போட்டியில் பங்கேற்க வயது வரம்பில்லை.போட்டியில் பங்கேற்க விரும்பும் தனிநபர் மற்றும் குழுவினர் www.sdat.tn.gov.in இணையதளத்தில் செப். 2 வரை பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.