| ADDED : ஆக 01, 2024 05:01 AM
மதுரை: அலங்காநல்லுார் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை மதுரை வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது: நீர்ப்பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் சாத்தையாறு துணை வடிநில பகுதியில் அலங்காநல்லுார், மதுரை மேற்கு வட்டாரங்களைச் சேர்ந்த 620 விவசாயிகள் இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தேங்காய், கொப்பரை கொள்முதல் செய்து கூடத்தில் இ - நாம் திட்டத்தின் கீழ், வாடிப்பட்டி ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்கிறோம். மேலும் கொய்யா, வாழை, மக்காச்சோளமும் ஏல முறையில் விற்பனையாகிறது. அடுத்தகட்ட முயற்சியாக மசாலா பொடிக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பை நிறுவனம் மூலம் உறுப்பினர்களுக்கு விற்பனை செய்கின்றனர். மூலப்பொருட்களை விவசாயிகள், மொத்த கடையில் இருந்து கொள்முதல் செய்து தயாரிப்பதால் சந்தையை விட குறைவான விலையில் விற்கின்றனர். இது நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி என்றார்.வேளாண் அலுவலர் மலர்விழி, உதவி அலுவலர்கள் கண்ணன், பரமேஸ்வரன், நிறுவன சி.இ.ஓ. ராஜபாண்டி, இயக்குநர்கள் தனிராஜன், தங்கராஜ், அனுமதி பாண்டி, மயில்வாகனம், தேன்மொழி, ஆறுமுகம், வெள்ளையன், சாக்ரடீஸ், தேசிய வேளாண் நிறுவன அலுவலர் முருகன் கலந்து கொண்டனர்.