| ADDED : ஜூன் 14, 2024 05:20 AM
மதுரை: பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது நல்ல விஷயங்களை கேட்க வேண்டும் என, ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேசினார்.மதுரை தியாகராஜர் கல்லுாரி, அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கருமுத்து கண்ணன் நினைவாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் பிரகலாத சரித்திரம் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:கடவுள் இல்லை என்று ஒருவன் சொன்னாலே, இருக்கு என்று அர்த்தம். நான் உணரவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நம்பிக்கைதான் கடவுள். வாய்மையே வெல்லும் என்கிறோம். புறந்துாய்மை நீரால் அமையும், அகந்துாய்மை வாய்மையால் காணப்படும் என்கிறார் வள்ளுவர். நம் இதயத்தில் பகவான் இருக்கிறார். அதனால் எப்போதும் அதனை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற சத் விஷயங்களைக் கேட்டால் பிறக்கிற குழந்தைக்கு நல்ல சிந்தனை வரும். பகவான் நாமாவை கேட்கச் சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும்.கஷ்டம் வரும்போது நாராயணா என்ற நாமாவை சொல்ல வேண்டும் என்கிறார் ஆழ்வார். பாஸ்போர்ட் என்பதற்கு தமிழில் கடவுச்சீட்டு என்கின்றனர். வெளிநாடு செல்லக்கூட கடவுளின் அனுக்கிரகம் இருக்க வேண்டும் என்பதற்காக கடவுச்சீட்டு என்கின்றனர்.ஹரி ஓம் நாராயணாய நமஹ என்றான் பிரகலாதன். பகவான் நாமாவை சொன்னால், கேட்டால் யார் எந்த தொல்லை கொடுத்தாலும் அது நீங்கும் என்பதற்கு உதாரணம் பிரகலாதன் சரித்திரம். பகவான் நாமா நம்மைக் காப்பாற்றும். நமக்கு வேண்டாத செய்திகளை நாம் தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.சொற்பொழிவு ஜூன் 16 வரை தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.