18 ஆயிரம் கிராம உதவியாளர்கள் பொருந்தாத அரசாணையால் பாதிப்பு
மதுரை: வருவாய்த் துறையில் பொருந்தாத அரசாணையால் கிராம உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பகுதி நேர பணியாளர்களான இவர்களை 1995 க்கு பின் அரசு முழுநேர பணியாளராக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கியது. இந்நிலையில் 2023 மார்ச்சில் தொழிலாளர் நலத்துறையில் வெளியான அரசாணை 33ல் 'சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோர் இறந்தால் கருணை அடிப்படை பணிவாய்ப்பு வழங்கப்படாது' என்றது. இதனால் கிராம உதவியாளர்கள் இதுவரை பெற்ற கருணை அடிப்படையிலான பணிநியமனம், சி.பி.எஸ்., பிடித்தம் மறுக்கப்படுகிறது.இவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுபவர்கள். 8 மணி நேரம் பணியாற்றுவோருக்கு அரசின் அனைத்து பணப்பலன்களும் உண்டு. ஆனால் முழுநேர கிராம உதவியாளர்களுக்கு அச்சலுகைகள் மறுக்கப்பட அரசாணை 33 காரணமாக உள்ளது. இதுகுறித்து கிராம உதவியாளர்கள் சங்கம், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்ரா) பலமுறை போராடி, அரசிடம் மனு கொடுத்துள்ளன. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பரிந்துரைத்தும் அரசாணை 33ஐ சுட்டிக்காட்டி மனிதவள மேலாண்மைத்துறை மறுத்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் கிராமங்களில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் போராட்ட மனநிலையில் உள்ளனர். பொருந்தாத அரசாணை
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரகுமார் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறை விதிகள் நிறுவனங்களின் தொழிலாளர்களை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மனிதவள மேலாண்மைத்துறையின் ஒப்புதல் பெறாமல் வெளியிடப்பட்ட அந்த அரசாணை, மனிதவள மேலாண்மைத்துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு எவ்வகையில் பொருந்தும். பணியின் போது கிராம உதவியாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்ப நிலை என்னவாகும். கிராம உதவியாளர்களுக்கு பொருந்தாத அரசாணையை பயன்படுத்தி சலுகைகளை மறுப்பது அக்குடும்பத்தை அழிப்பது போன்றது. இந்நிலையை மாற்றி அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்றார்.