தி.மு.க., அரசின் மெத்தனத்தால் தனியாரிடம் 350 மருத்துவ சீட்கள்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
மதுரை : ''தமிழகத்தில் கடந்த 53 மாத தி.மு.க., ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லுாரிகூட உருவாக்கவில்லை. நாடு முழுவதும் 6,850 மருத்துவ இடங்கள் ஒதுக்கியதில் தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு ஒரு இடம்கூட கூடுதலாக பெற முடியாத கையாளாகாத அரசாக தி.மு.க, உள்ளது'' என அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரையில் அவர் கூறியதாவது: இந்தியாவில் தமிழகம் 74 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளை கொண்டு முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் மட்டும் 17 அரசு மருத்துவக் கல்லுாரி உருவாக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1450 மருத்துவ இடங்களை பழனிசாமி பெற்று தந்தார். 2021 சட்டசபை தேர்தலில் போது தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லுாரிகளை உருவாக்குவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் 53 மாதமாகியும் இதுவரை ஒரு கல்லுாரியைகூட ஸ்டாலின் திறக்கவில்லை. அ.தி.மு.க., அரசு ஏற்படுத்திய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு போதுமான நிர்வாக வசதி இல்லை. பேராசிரியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளால் கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் 6850 மருத்துவ இடங்களை அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 350 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கானது. அரசு மருத்துவக் கல்லுாரி எண்ணிக்கை அடிப்படையில் 500 மருத்துவ இடங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அரசு மருத்துவக் கல்லுாரிகளை முறையாக கட்டமைப்பை செய்யவில்லை என்பதால் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. சுகாதாரத் துறையில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.