ஒரு போன் போதுமே...
ஆக்கிரமிப்பு அட்டகாசம் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள் பல, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம், கீழவாசல். கொசுக்களின் பிறப்பிடம் மதுரை தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. இங்கு கொசுக்கள் உற்பத்தி யாகி குடியிருப்போர் பாதிக்கின்றனர். கழிவுநீர் தடையின்றி செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகசுப்பிரமணியன், தாசில்தார் நகர். புகாரளித்தும் பயனில்லை மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர், திருநாவுக்கரசு, பகத் சிங் தெருக்களில் குப்பை குவிந்து சுகாதார கேடாக உள்ளது. மாநகராட்சியிடம் புகாரளித்தும் பயனில்லை. சுகாதாரக் கேடால் குழந்தைகள் பாதிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும். - மாரீஸ்வரன், நேரு நகர். கால்நடை தொல்லை மதுரை நத்தம் ரோட்டின் நடுவில் பராமரிப்பின்றி திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சக்திவேல், பாமா நகர். வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி மதுரை அண்ணா நகர் நியூ எச்.ஐ.ஜி., காலனியில் உள்ள பூங்காவில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. அங்கு வரும் குழந்தைகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. மாநகராட்சி வேடிக்கை பார்க்காமல் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரமேஷ், அண்ணா நகர். சீரற்ற வேகத்தடை மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே சீரற்ற வேகத்தடையால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் முதல் பழங்காநத்தம் வரை பல இடங்களில் இதே பிரச்னைதான் நிலவுகிறது. - விஷ்ணு, காளவாசல்.