| ADDED : ஜன 17, 2024 07:04 AM
அலங்காநல்லுரர் : அலங்காநல்லுார் அருகே வைகை பெரியாறு பாசன கால்வாயில் விழுந்த ஓட்டையால், தண்ணீர் வெளியேறி வீணாவதால் விவசாயம் பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெரிய ஊர்சேரி சைமன் பாலம் அருகே கண்மாய் பாசன ஓடை பெரியாறு பாசன கால்வாயின் கான்கிரீட் தளத்திற்கு கீழாக செல்கிறது. இப்பகுதிக்கு கண்மாய் பாசனம் மட்டுமே உள்ள நிலையில் கான்கிரீட் தளத்தில் விழுந்த ஓட்டை வழியாக தண்ணீர் அதிகளவில் வெளியேறுகிறது. இதனால் 30 ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து வீணாகி வருவதாகவும், வாழை, தேக்கு, தென்னை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.பெரிய ஊர்சேரி விவசாயி பழனிக்குமார் கூறியதாவது : சில மாதங்களுக்கு முன் கால்வாயில் இருந்த ஓட்டையை பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். தரமற்ற முறையில் நடந்த பணியால் பாசனத்திற்கு தண்ணீர் வந்த முதல்நாளே மீண்டும் ஓட்டை விழுந்தது. கடந்த 3 மாதங்களாக வயல்களில் தேங்கியுள்ள பாசன நீரால் நெல் நடவு செய்ய முடியவில்லை. மற்ற பயிர்களும் பாதிக்கின்றன, என்றார்.