21 ஆண்டாக போலீசுக்கு டிமிக்கி ஆட்டோ டிரைவருக்கு காப்பு
மதுரை: மதுரையில் கொள்ளையில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச்சென்று மீண்டும் வந்து ஆட்டோ ஓட்டி வந்தவரை, 21 ஆண்டுகளுக்கு பின் பயணி போல, ஸ்டேஷன் வரை போலீசார் பயணித்து கைது செய்தனர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55. இவர் மீது கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளது. வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். வில்லாபுரம் பகுதியில் ஆறுமுகம் ஆட்டோ ஓட்டி வருவது போலீசாருக்கு தெரிந்தது. நேற்று அவரது ஆட்டோவில் போலீசார், 'தெப்பக்குளம் பகுதிக்கு செல்ல வேண்டும்' எனக்கூறி பயணி போல சவாரி சென்றனர். ஸ்டேஷன் அருகே வந்ததும் அவரை கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: தெப்பக்குளம் ஸ்டேஷனிற்கு உட்பட்ட பகுதியில், 2004ல் ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக ஆறுமுகம் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆறுமுகம் வெளிநாடு தப்பிச்சென்றதால், அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து வெளிநாட்டிலேயே இருப்பதாக நாங்கள் கருதிய நிலையில், வில்லாபுரத்தில் அவர் ஆட்டோ ஓட்டி வருவது தெரிந்தது. தனிப்படை போலீசார், 'தெப்பக்குளம் வரை செல்ல வேண்டும்' எனக்கூறி, அவரது ஆட்டோவில் பயணி போல ஏறினர். அவர்களை போலீஸ் எனத் தெரியாமலும், 21 ஆண்டுகளானதால் போலீசாருக்கு தன்னை அடையாளம் தெரியாது என்று அவர் கருதினார். அவரை கைது செய்தோம். இவ்வாறு கூறினர்.