உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயில் சரணாலயம் அமைக்க வழக்கு

கண்மாயில் சரணாலயம் அமைக்க வழக்கு

மதுரை: மதுரை சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்த பொதுநல மனு:ரிங் ரோடு அருகே சாமநத்தம் கண்மாய் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரிய வகை மரங்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சி இனங்கள், பறவைகள் உள்ளன. சுற்றுச்சூழலின் முக்கிய அம்சமான பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கிறது. குளிர்காலத்தில் தொலைதுாரங்களிலிருந்து பறவைகள் வருகின்றன. பறவைகள் சரணாலயமாக அறிவிக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலானது. 2024 அக்.21 ல் விசாரணையின்போது தமிழக அரசு வழக்கறிஞர்,'கிராம ஊராட்சி, நீர்வள ஆதார அமைப்பிடம் தடையில்லாச் சான்று பெற்று மேல்நடவடிக்கைக்காக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள்,'6 மாதங்களில் முன்னேற்றம் ஏற்படாவிடில் மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம்' என உத்தரவிட்டு முடித்து வைத்தனர்.சுற்றுச்சூழல், நீர்நிலையை பாதுகாக்க, பறவைகளின் வாழ்விடத்தை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இதை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு வனத்துறை செயலர், மதுரை கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர், கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தற்போதைய நிலை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை