செக் மோசடி: பலசரக்கு கடை வியாபாரிக்கு ஓராண்டு சிறை
மதுரை : மதுரையில் செக் மோசடி வழக்கில் பலசரக்கு மளிகை கடை வியாபாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மேலஅனுப்பானடி ஜெயபிரகாஷ் 70, பாண்டிய வேளாளர் தெரு கம்ப்யூட்டர் சென்டரில் பொறுப்பாளராக பணிபுரிகிறார். இக்கடைக்கு அருகில் சார்லஸ் என்பவர் பலசரக்கு மளிகை கடை நடத்தி வருகிறார். அடிக்கடி கம்ப்யூட்டர் சென்டருக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றதால் சார்லஸூக்கும், ஜெயபிரகாஷூக்கும் பழக்கம் ஏற்பட்டது. குடும்ப செலவுக்காக சார்லஸ் ஜெயபிரகாஷிடம் ரூ.1.25 லட்சம் கடம் வாங்கினார். கடனை திருப்பி செலுத்த சார்லஸ் வழங்கிய வங்கி செக்கை ஜெயபிரகாஷ் மாற்ற முயன்ற போது பணம் இன்றி திரும்பியது. பலமுறை கேட்டும் பணத்தை சார்லஸ் திரும்ப வழங்கவில்லை. சார்லஸ் மீது மதுரை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜெயபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுவாமிநாதன் ஆஜரானார். பின் இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சார்லஸூக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த நடுவர் ராஜபிரபு இழப்பீடாக ரூ.1.25 லட்சத்தை ஜெயபிரகாஷூக்கு வழங்க உத்தரவிட்டார்.