மதுரை கலைஞர் நுாலகத்துடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் 38 பள்ளிகள் உறுப்பினர்களாக இணைப்பு
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகத்தின் அனைத்து புத்தகங்களையும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இலவசமாக படிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்நுாலகத்துடன் பள்ளி, கல்லுாரிகள் சார்பில் மாணவர்கள் உறுப்பினர்களாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து கமிஷனர் சித்ரா முயற்சியில், மாநகராட்சியின் 38 உயர், மேல்நிலை பள்ளி மாணவர்களை நுாலகத்தில் உறுப்பினர்களாக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கமிஷனரின் இந்நடவடிக்கை ஆசிரியர்கள், மாணவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது: நுாலகத்தில் மாணவர்களுக்கு தேவையான கணிதம், தமிழ், அறிவியல், வரலாறு, இலக்கியம் புத்தகங்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் மாணவர்கள் நேரில் வந்து புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம். அல்லது தலைமையாசிரியர் மூலம் குறைந்தது 25 புத்தகங்கள் எடுத்துச் சென்று சுழற்சி முறையில் மாணவர்கள் படிக்கலாம்.படித்த புத்தகங்களை பற்றி நுாலகத்தில் நடக்கும் வாசிப்பு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் விமர்சிக்கலாம். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இங்குள்ள மின்னணு நுாலகத்தை பயன்படுத்தலாம். நுாலகத்தை முழுமையாக பயன்படுத்த ஒப்பந்தத்தில் வழிகாணப்பட்டுள்ளது என்றனர்.