மதுரையில் போலீஸ் விசாரணையில் மரணம்: சி.பி.சி.ஐ.டி., அறிக்கை தர அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில் ஒருவர் மரணமடைந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொது நல மனு : மதுரை வண்டியூர் தினேஷ் குமார். இவரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா உள்ளிட்ட சில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வண்டியூர் கால்வாய் பகுதியில் தினேஷ் உடல் மீட்கப்பட்டது. போலீசார் அடித்து கொலை செய்ததாகக் கூறி அவரது உறவினர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மரண வழக்கை போலீசார் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது பட்டியல் இன வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி மற்றொரு மனு செய்தார். அக்., 10 ல் இரு நீதிபதிகள் அமர்வு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு: பிரேத பரிசோதனையை முறையாக மேற்கொள்ளவில்லை. உடல் சிதைந்துள்ளதாக அந்த அறிக்கையில் உள்ளது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: விசாரணை நடக்கிறது. தடயவியல் ஆய்வறிக்கைக்காக காத்திருக்கிறோம். போலீஸ் காவலில் மரணம் நிகழவில்லை. போலீஸ் காவலில் இருந்த போது தப்பிக்க முயன்ற தினேஷ் வண்டியூர் கால்வாய் நீரில் விழுந்து இறந்தார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். இதற்கு ஆதாரமாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.,க்கு அவகாசம் அளித்த நீதிபதிகள் விசாரணையை நவ., 27க்கு ஒத்திவைத்தனர்.