| ADDED : டிச 12, 2024 05:27 AM
நகரில் வாகன பெருக்கம், போக்குவரத்து விதிமீறல், மோசமான ரோடு, கவனக்குறைவு போன்ற காரணங்களால் தினமும் சாலை விபத்து நடப்பது வாடிக்கையாகி விட்டது. வழக்குப்பதிவு, அபராதம் விதித்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆண்டுதோறும் சராசரியாக 600க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. 150க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்க போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் கடந்தாண்டை விட இந்தாண்டு விபத்து, உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.2022ம் ஆண்டில் நடந்த 690 சாலை விபத்துகளில் 171 பேர் இறந்தனர். 519 பேர் காயமுற்றனர். கடந்தாண்டு 703 விபத்துகளில் 235 பேர் இறந்தனர். 468 பேர் காயமுற்றனர். இந்தாண்டு நவ.30 வரை நடந்த 610 விபத்துகளில் 217 பேர் இறந்தனர். 393 பேர் காயமுற்றனர். கடந்தாண்டைவிட இந்தாண்டு இறப்பு குறைய, போக்குவரத்து அமலாக்க திட்டங்களை செயல்படுத்தியதே காரணம் என்கிறார் போக்குவரத்து துணைகமிஷனர் வனிதா. நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: கமிஷனர் லோகநாதன் அறிவுரைப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். குறிப்பாக 10 சாதாரண விபத்துகள், 5 இறப்பு நடந்த இடங்களில் விபத்து காரணம் குறித்து பிற துறைகள், கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து ஆய்வு செய்து, அங்கு தேவையான மாற்றங்களை செய்து வருகிறோம். இதில் 75 'பிளாக் ஸ்பாட்', 25 'ஹாட் ஸ்பாட்' களைக் கண்டறிந்து அங்கு விபத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முக்கிய சந்திப்புகள், சிக்னல் பகுதியில் போக்குவரத்து விதிமீறலை கண்டறிந்து தடுத்து வருகிறோம். விபத்தில் இறந்தவர்களில் டூவீலரில் வந்தவர்களும், நடந்து சென்றவர்களும்தான் அதிகம். அடுத்தாண்டு சில போக்குவரத்து திட்டங்களை அமல்படுத்த உள்ளோம். இதன்மூலம் விபத்தும், உயிரிழப்பும் இன்னும் குறையும். இவ்வாறு கூறினார்.