உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் மேம்பால பணிக்கு இடம் தந்தவர்கள்

 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் மேம்பால பணிக்கு இடம் தந்தவர்கள்

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை பாலம் அமைகிறது. இதற்காக ரோட்டின் இருபுறமும் தமுக்கம் முதல் தேவர் சிலை சந்திப்பு வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதன் நிலஉரிமையாளர்களுக்கு அரசின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இன்னும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. அமெரிக்கன் கல்லுாரி எதிரே ஒரு குடும்பத்துக்கு சொந்தமான இடம் 19 சென்டில் 8 சென்ட் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு வழிகாட்டி மதிப்பில் 3 மடங்கு தொகையாக ரூ.4 கோடியே 75 லட்சத்து 68 ஆயிரத்து 15 மதிப்பிடப்பட்டுள்ளது. இது அந்த சர்வே எண்களில் உள்ள பலருக்கும் வழங்க வேண்டிய தொகை. இந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இக்குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் கண்ணன், கலெக்டர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை என பலதரப்பிடமும் முறையிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''நான்கைந்து மாதங்களாக எல்லா தரப்பிடமும் முறையிட்டும் இழப்பீடு வந்து சேரவில்லை. எனக்கு வங்கிக் கடன் நெருக்கடி உள்ளநிலையில் இந்த தொகையை நம்பியே உள்ளேன். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி கூறுகையில், ''நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும் ரூ.148 கோடி ஒதுக்கீடு செய்து அதனை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி அவர்கள்தான் ஆவணங்களின் அடிப்படையில் தொகையை வழங்குவர். அவர்களிடம் ஆவணங்களை பெறலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி