கந்த சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் திருமணம் சொக்கநாதர் கோயிலுக்கு மாற்றம் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு இரண்டு நாட்கள் பக்தர்களின் திருமணம் சொக்கநாதர் கோயிலுக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவில் நவ. 7ல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி புறப்பாடு, பக்தர்கள் மாவிளக்கு வைத்தல், நவ. 8ல் சட்டத்தேர் கிரிவலம் நிகழ்ச்சிகள் நடப்பதால் 2 நாட்களும் அதிக அளவு பக்தர்கள் கோயிலுக்கு வருவர். கோயிலுக்குள் காப்பு கட்டி விரதம் கடைபிடிப்போர், வெளியூரில் இருந்து வருவோர், திருமண வைபவங்களுக்கு வருவோர் என பக்தர்கள் அதிகளவில் இருப்பர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே, பதிவு திருமணங்கள் இக்கோயிலின் உபகோயிலான சொக்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெறும். பக்தர்கள் திருமண விவரங்களை கோயிலில் பதிவுசெய்தபின், உப கோயிலான சொக்கநாதர் சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.சுந்தர வடிவேலு கூறியதாவது: காலம் காலமாக இருந்துவரும் நடைமுறையை மாற்றுவது சரியான அணுகுமுறை இல்லை. சொக்கநாதர் கோயில் சிறியது, அங்கு திருமணம் நடத்துவது சரியாக இருக்காது. சஷ்டி திருவிழாவின் போது கோயிலில் தங்கியிருக்கும் பக்தர்கள் காலை வேளையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் செல்வர். சூரசம்ஹாரம் மாலையில்தான் நடக்கிறது. மறுநாள் தேரோட்டத்தின் போது பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து செல்வர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமணம் நடத்த சிரமம் ஏற்படாது. எனவே பக்தர்களுக்கு விரோதமான இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றார்.