கரூர் சம்பவத்தால் தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பில்லை * வைகோ பேட்டி
அவனியாபுரம்: 'கரூர் சம்பவத்தால் தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது,' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: கலை உலகில் உச்ச நட்சத்திரமான விஜய், த.வெ.க., வை தொடங்கி சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார். அவர் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் மக்கள் 7 மணி நேரம் காத்திருந்தது குறித்து விஜய்க்கு தகவல் தெரிவித்து இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்துவிடும் என யூகித்து சரியான முறையை அவர் கையாண்டிருக்கலாம். 41 பேர் பலியாகிய அந்த பதட்டத்தில் விஜய் சென்னை சென்று விட்டார். அவர் திருச்சியில் விடுதியில் தங்கியிருந்து ஒரு நாள் கழித்துகூட, உயிர் பலியான குடும்பத்தினருக்கு நேரடியாக சென்று இரங்கலை தெரிவித்து இருக்கலாம். கரூர் சம்பவத்தால், தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இப்பொழுது நடத்தப்படும் யூகங்கள், கணக்கெடுப்பு போன்று தேர்தல் முடிவுகள் இருக்காது என்றார்.