உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆள் பற்றாக்குறையால் பழைய வழக்குகளை குளோஸ் பண்ணியாச்சு: விசாரிக்க முடியாமல் திணறும் குற்றப்பிரிவு போலீசார்

ஆள் பற்றாக்குறையால் பழைய வழக்குகளை குளோஸ் பண்ணியாச்சு: விசாரிக்க முடியாமல் திணறும் குற்றப்பிரிவு போலீசார்

மதுரை: மதுரை நகரில் குற்றப்பிரிவில் ஆள் பற்றாக்குறையால் பழைய வழக்குகளை விசாரிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். பல வழக்குகளை பிரயோஜனமில்லை, மேல் நடவடிக்கை தேவை இல்லை எனக்கூறி நீதிமன்ற கவனத்திற்கே கொண்டு செல்லாமல் 'குளோஸ்' செய்து வருகின்றனர்.போலீஸ் ஸ்டேஷன்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாருக்குதான் முக்கியத்துவம். இவர்கள் ரவுடியிஸம், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது, கொலையை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். குற்றப்பிரிவு போலீசாரோ கொள்ளை, திருட்டை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். குற்றப்பிரிவின் மீது உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் குற்றப்பிரிவு துணைகமிஷனர் என பணியிடம் இருந்தது. அப்போது குற்றப்பிரிவுக்கு முக்கியத்துவம் இருந்தது.நிர்வாக காரணங்களுக்காக தற்போது மதுரை வடக்கு, தெற்கு துணைகமிஷனர்கள் இருபிரிவுகளையும் சேர்ந்தே பார்த்து வருகின்றனர். பெரிய அளவில் திருட்டு, கொள்ளை நடந்தால் மட்டுமே தொடர் விசாரணை, மேல்நடவடிக்கை குறித்து ஆர்வம் காட்டுகின்றனர். மற்றபடி வீடு, கடை, அலுவலகங்களில் நடக்கும் திருட்டுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அதேசமயம் குற்றப்பிரிவில் போலீசாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருக்கும் போலீசாரில் சிலர் நீதிமன்றம், அலுவலக பணியில் கவனம் செலுத்துவதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.இதுபோன்ற வழக்குகளை 'குளோஸ்' செய்துவிடுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன் விசாரிக்கப்படாமல் 'துாசி' படர்ந்து காணப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை 'பிரயோஜனமில்லை', 'மேல் நடவடிக்கை தேவை இல்லை' என எழுதி ஸ்டேஷனிலேயே 'குளோஸ்' செய்துவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தால் அதன் ஒரு நகல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால் பல வழக்குகள் அனுப்பப்படாமல் ஸ்டேஷன் 'கணக்கிலேயே' வைத்திருக்கின்றனர். அந்த வழக்குகளைதான் 'குளோஸ்' செய்து வருகின்றனர். தற்போது 2015, 2016ம் ஆண்டு வழக்குகளை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், ''ஆள் பற்றாக்குறையால் தொடர் விசாரணை செய்ய முடியாமல் பல வழக்குகள் கிடப்பில் உள்ளன. பெரிய அளவில் திருட்டு, கொள்ளை நடந்தால் மட்டுமே உடனே வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மற்ற வழக்குகளில் புகார் பெற்றுக்கொண்டதற்கான 'சி.எஸ்.ஆர்.,' மட்டும் வழங்குகிறோம். புகார்தாரர் வற்புறுத்தினால் வேறுவழியின்றி வழக்குப்பதிவு செய்து வருகிறோம். கூடுதல் போலீசாரை நியமித்து விசாரித்தால் குற்றவழக்குகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்'' என்றனர்.குற்றப்பிரிவில் போலீசாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருக்கும் போலீசாரில் சிலர் நீதிமன்றம், அலுவலக பணியில் கவனம் செலுத்துவதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ