மாணவியருக்கு மின்ஊழியர் உதவி
வாடிப்பட்டி: சமயநல்லுாரை அடுத்த அம்பலத்தடி கணேசன் 42, கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோனியா 4 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இறந்தார்.கணேசன் ஜன. 2ல் இறந்தார். இவரது 2 மகள்கள் தர்ஷினி 14, மதுநிஷா 13, இருவரும் சிறுவாலை அரசு பள்ளியில் முறையே 9, 7ம் வகுப்புகளில் படிக்கின்றனர். பெற்றோர் இல்லாத நிலையில், வறியநிலையில் உள்ள தாத்தா, பாட்டி பராமரிப்பில் படிக்க சிரமப்படுகின்றனர்.இச்சிறுமிகள் நிலை குறித்து சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் சரவணன் சமயநல்லுார், பரவை பகுதி வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்தார். இதனை பார்த்த வாடிப்பட்டி மின் வாரிய 'போர்மேன்' சமயநல்லுார் முனீஸ்வரன் 54, இன்ஸ்பெக்டர் முன்னிலையில் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கினார். அவரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.