| ADDED : செப் 10, 2025 01:57 AM
மதுரை : மதுரையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் உட்பட 400 பேருக்கு இலவச வீடுகளை கட்டி வழங்குவதற்காக புதிய நகரை உருவாக்கி டிசம்பருக்குள் முதல்வர் ஸ்டாலின் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனை, பட்டாக்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. தற்போது மாநிலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான தனி நகரை முதன்முறையாக மதுரையில் உருவாக்கி வருகின்றனர். மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சியில் கட்டப்புளி நகரில் இந்நகர் உருவாகிறது. 400 பேருக்கு இலவச வீடுகள் வழங்குவதற்காக, 10 ஏக்கருக்கும் கூடுதலான இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. துரிதமான பணிகள் இதில் முதற்கட்டமாக 194 வீடுகள் கட்ட 4 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 28 ல் வீடுகள் கட்டுவதற்கு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பூமிபூஜைகள் நடந்தன. தொடர்ந்து பணிகள் மளமளவென நடந்ததால், இரண்டே மாதங்களில் 'லிண்டல்' வரை வளர்ந்துள்ளன. இப்பணிகளை அமைச்சர், அதிகாரிகள் மட்டுமின்றி பயனாளிகளும் அடிக்கடி ஆய்வு செய்கின்றனர். சமீபத்தில் ஊரக வளர்ச்சி கமிஷனர் பொன்னையா ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இவ்வீடுகள் 'கலைஞர் அன்பு இல்லம்' என்ற பெயரில் அமையும். தெருக்களில் வடிகால் வசதி, பூஞ்செடிகள், பூங்காக்கள், தனி ரேஷன் கடை, தெருவிளக்குகள், மேல்நிலை குடிநீர் தொட்டி, வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு உட்பட தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும். பொதுவாக கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆனால் இங்கு வீட்டுமனை, வீடு எல்லாமே இலவசம்தான். கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் உள்ள நிதிக்கும் கூடுதலாக வரும் தொகையை அமைச்சர் மூர்த்தியே வழங்க உள்ளார். யார் யாருக்கு முன்னுரிமை இதற்கான பயனாளிகள் தேர்வில் முதற்கட்டமாக 72 மாற்றுத்திறனாளிகள், 37 திருநங்கைகள், 85 வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள வீடுகளுக்கு அடுத்த கட்டமாக தேர்வு நடைபெறும். இந்த வீடுகளை வருகிற தேர்தலுக்குள் முடித்து திறக்க ஏற்பாடு செய்தனர்.முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த ஏப்ரல், மேயில் நடப்பதாக இருந்தது. பின்னர் தள்ளிப் போன விழா வரும் டிசம்பரில் நடக்க உள்ளது. அதற்காக மதுரை வரும் முதல்வர் இந்நகரை திறந்து வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.