சரண் விடுப்பை ஒப்படைப்பு செய்ய முடியாமல் அரசு ஊழியர்கள் தவிப்பு
மதுரை : 'சரண் விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தை பலரது அலைபேசி செயலியில் பதிவு செய்ய இயலாததால் பணபலனை விரைந்து பெற இயலாமல் போய்விடுமோ' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சரண் விடுப்பு ஒப்படைப்பை 2020 ல் நிறுத்தி வைத்தது. ஐந்தாண்டுகளாக போராடியதால் கடந்த ஏப்., 28 ல் சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் 1.10.2025 முதல் சரண் விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அலைபேசியில் வசதியில்லை கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சரண் விடுப்பை ஒப்படைக்க ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) மென்பொருளில் இயங்கும் களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் சிலருக்கு பதிவு செய்த விவர பட்டியலை பெற இயலவில்லை. பலரது அலைபேசியில், சரண் விடுப்பை ஒப்படைக்கும் வசதி இந்த (ஆண்ட்ராய்டு) அலைபேசியில் இல்லை என்று வருகிறது. இதேபோல கடந்த ஏப்ரலில் அறிவித்த அகவிலைப்படியும் உடனடியாக பெற முடியாமல் மே இறுதியில் ஊதியத்துடன்தான் பெறமுடிந்தது. இந்த செயலி, சர்வர் போன்ற வசதி இல்லாத காலங்களில் நிலுவைத் தொகை, பணபலன்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டால் சிலதினங்களில் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணம் பெற்றுவிடுவர். அறிவிப்புக்கும், பணம் பெறுவதற்குமான இடைவெளியை குறைக்கவே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய மென்பொருளை உருவாக்கி, அதன்மூலம் பணபலன் தாமதமின்றி வழங்கப்படுகிறது. இந்த மென்பொருள், செயலி 2020 முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தாலும், அரசு ஊழியர் சங்களின் போராட்டங்கள், முறையீடுகளால் குறைகள் பல களையப்பட்டன. ஆனாலும் இன்னும் ஏராளமான நடைமுறைக்கு ஒவ்வாத, முரணான செயல்முறைகள் இருக்கவே செய்கின்றன. சங்கத்தினர் வேண்டுகோள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜன் கூறியதாவது: தற்போது அரசு ஊழியர் பணம் பெறுவது உள்ளிட்ட எல்லா விண்ணப்பங்களையும் களஞ்சியம் செயலி மூலமே மேற்கொள்ள வேண்டும் என்ற அரசு உத்தரவு உள்ளது. ஆனால் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விண்ணப்பிக்க முற்படும்போது, தங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்தச் செயலி செயல்படாது என வருகிறது. களஞ்சியம் செயலி அனைத்து அலைபேசிகளிலும் செயல்படும் படியான ஏற்பாடை செய்ய வேண்டும். பணபலன்கள் உரிய காலங்களில் சென்றடையுமாறு செய்ய வேண்டும் என்றார்.