பயன்பாட்டுக்கு வரும் முன்பே சேதமான சுகாதார வளாகம்
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டி பழச்சந்தையில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம் சேதமடைந்து வருகிறது. இங்கு தினமும் காலை 4:00 முதல் 9:00 மணி வரை செயல்படும் பழச்சந்தைக்கு மதுரை, திண்டுக்கல் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார விவசாயிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லை. 2024ல் ரூ.7.85 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் இன்றுவரை திறக்கப்படவில்லை. இந்த சந்தையால் ஒப்பந்ததார், ஊராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இங்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரம் பாதிக்கிறது. உயர்கோபுர விளக்கும் முழுமையாக எரிவதில்லை. கட்டட படிக்கட்டுகள் விரிசல் விட்டுள்ளது. இதற்கான தனி போர்வெல் அமைக்காமல் அருகே உள்ள கிராம சேவை மைய போர்வெல்லில் இணைத்துள்ளனர். ஒன்றிய நிர்வாகம் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.