உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் நிலத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் நிலத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: ன்காசி மாவட்டம் வீரகேரளம்புதுார் நவநீதகிருஷ்ணசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தாலுகா அலுவலகம் அமைக்க 2002 ல் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆலங்குளம் அருகே நாகல்குளம் சங்கரபாண்டியன் தாக்கல் செய்த மனு: வீரகேரளம்புதுாரில் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் அரசுத்துறை அலுவலகம் அமைப்பதற்காக 2002 ல் கையகப்படுத்தப்பட்டது. அங்கு 2009 ல் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு செயல்படுகிறது. தற்போதுவரை கோயில் நிர்வாகத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடு வழங்க தமிழக வருவாய்த்துறை, நிதித்துறை செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,'இம்மனு 2020 ல் தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடு வழங்காததற்கான காரணத்தை தெளிவுபடுத்த தென்காசி கலெக்டர் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாமஸ் ராஜதுரை ஆஜராகினர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'குறித்த காலத்திற்குள் இழப்பீடு வழங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது,' என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயிலுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. இது சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கிய அதிகாரிகளின் பெரிய குறைபாடாகும். இழப்பீடு வழங்க நிலத்தின் சந்தை மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது. அவர் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நிர்ணயிக்க வேண்டும். அதனடிப்படையில் நியாயமான இழப்பீடு வழங்கப்படுவதை வருவாய்த்துறை, நிதித்துறை செயலர்கள், அறநிலையத்துறை கமிஷனர் உறுதி செய்ய வேண்டும். இதை 12 வாரங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை