உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை பழ மார்க்கெட்டில் குப்பை; மாநகராட்சிக்கு அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை பழ மார்க்கெட்டில் குப்பை; மாநகராட்சிக்கு அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை கே.கே.நகர் பழமார்க்கெட்டில் குப்பை தேங்கியுள்ளதை அகற்றுவதில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை கிருஷ்ணகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கே.கே.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பழ மார்க்கெட் உள்ளது. இங்கு தேங்கும் கழிவுகளை அகற்ற மாநகராட்சி தரப்பில் போதிய வசதிகளை செய்யவில்லை. பழ வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வெளியே குப்பை குவிக்கின்றனர். அவற்றை மாடுகள் உட்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. போதிய குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும்.கழிவுகளை மார்க்கெட் வளாகத்திற்கு வெளியே குவிப்பதை தடுக்கநடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனருக்குஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் அபிமன்யு ஆஜரானார். மாநகராட்சி தரப்பு: மார்க்கெட்டில் 240 கடைகள் உள்ளன. வளாகம் மற்றும் வெளியே 16 குப்பைத் தொட்டிகள் உள்ளன. தினமும் 3 முறை சுத்தம் செய்யப்படுகிறது. இரவில் வாகனங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும்போது குப்பை தேங்குகின்றன. அபராதம் விதிக்கப்படுகிறது. சில கடைகளுக்கு ஏன் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குப்பைத் தொட்டிகள் உள்ளதற்கான போட்டோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வளாகம் சுத்தமாக உள்ளது என்பதற்குரிய போட்டோ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. பிரச்னையின் தீவிரம் கருதி சுத்தமாக பராமரிக்க போதிய நடவடிக்கை இல்லை. இதனால் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். விசாரணை அக்.28 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ