கால்வாய் ஆக்கிரமிப்பு அளவீடு தாமதம் உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை : மதுரை மயில்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: புதுவிளாங்குடி செம்பருத்தி நகர், ஐயப்பன் தெரு, கணபதி நகர், சக்தி நகரில் விளாங்குடி பெரிய கண்மாய்க்கு செல்லும் 12 கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அகற்ற கலெக்டர், ஆர்.டி.ஓ., வடக்கு தாசில்தார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு 2021 ல் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை அதிகாரிகள் ஏன் எவ்வித அளவீடும் மேற்கொள்ளவில்லை என்பது எங்களுக்கு புரியவில்லை.அளவீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அளவீடு முடிவில் ஆக்கிரமிப்பு உறுதியானால் அவற்றை அகற்ற வேண்டும். இதை 4 மாதங்களில் மேற்கொள்ள வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.