மக்காச்சோள படைப்புழுவில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
மதுரை : மக்காச்சோள படைப்புழுவுக்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண் அறிவியல் மைய பூச்சியியல் துறை இணைப்பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது:பயிர் முளைத்த 15 முதல் 20 நாளில் குளோரான்டரினிபுரோல் (18.5 எஸ்.சி.) மருந்தை லிட்டர் தண்ணீருக்கு 0.4 மில்லி அல்லது 0.4 மில்லி புளுபென்டமைடு (480 எஸ்.சி) அல்லது 5 மில்லி அசாடிராக்டின் (1500 பி.பி.எம்.) கலந்து தெளிக்கவேண்டும்.முதிர் குருத்து நிலையில் (35 முதல் 40 நாள்) ஏக்கருக்கு ஒரு கிலோ மெட்டாரைசியம் அனிசோபிலியே தெளிக்கலாம். அல்லது எமாமெக்டின் பென்சோயேட் (5 எஸ்.ஜி.) 0.4 கிராம் அல்லது நாவலுாரன் 10 சதவீத இ.சி., (1.5 மில்லி) அல்லது ஸ்பைனிடிரோம் (11.70 எஸ்.சி.,) 0.5 மில்லி தெளிக்கவேண்டும்.பூ மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் தேவைப்பட்டால் முதிர் குருத்து நிலையில் தெளிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை தெளிக்கலாம். ஆனால் அதை ஏற்கனவே பயன்படுத்தியிருக்கக் கூடாது.வருமுன் காக்கும் நடவடிக்கையாக கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். சையான்ட்ரினிலிபுரோல் 19.8 சதவீதம், தயோமீத்தாக்சம் 19.8 சதவீதத்தை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்றளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.இறவையில் தட்டைப் பயறு, எள், துவரை அல்லது சூரியகாந்தியும் மானாவாரியில் தீவன சோளத்தை வரப்பு பயிராக மூன்று வரிசை விதைக்க வேண்டும். படைப்புழுக்களின் தாய் மற்றும் பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும் என்றார்.