| ADDED : செப் 21, 2011 12:32 PM
நான்கு வழிச்சாலையில் 'பறந்து' வரும் வாகனங்கள் 'நம்மூர்' மதுரைக்குள் நுழைந்ததும், 'மாநகர்' என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்வது அவசியம். அதற்கான இலக்கணம் கொஞ்சம்கூட இல்லை இந்த கலாசார தலைநகரத்துக்கு. நகரை 'பளிச்'சிட வைப்பது முதலில் சுத்தமான, சீரான, ஆக்கிரமிப்பு அற்ற ரோடுகள்தான். அத்தகைய ரோடுகள் நகரின் எந்தப் பகுதியிலும் இல்லை என்பதுதான் இங்கு வேதனை. தரமற்ற ரோடுகளை தாறுமாறாக அமைத்ததால், லேசான தூறலுக்கும், குடிநீர் குழா# உடைப்பு, கழிவுநீர் தேக்கம் என்ற அரைகுறை கட்டமைப்பு வசதியாலும், ரோடுகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. பல மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடைக்காக தோண்டிய சில ரோடுகள், இன்னும் பணிமுடியாமல், புழுதியை பரப்பிக் கொண்டிருக்கின்றன. விலை மதிக்க முடியாத உயிர்களை காவு வாங்குவதென கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன. இத்தனை இழப்புகளையும் தாங்கிக் கொண்டு நாளும் வலம் வருகின்றனர் மக்களுடன், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும். உண்ண உணவும், உடுக்க உடையும் அவசியம் என நினைக்கும் அவர்களுக்கு, எண்ண இயலாத இழப்புகளுக்கு காரணமான ரோடுகளை மட்டும் உடனுக்குடன் சீரமைக்க மனம் வருவதில்லையே ஏன்? திண்ணை அரசியல் பேசி பொழுதை கழிப்போரும் ஏனோ? அதை எண்ணிப் பார்ப்பதில்லை. மழைக்காலம் நெருங்கி ரோடுகளை இன்னும் மோசமாக்கும் நாள் தொலைவில் இல்லை. அதற்குள் விழித்துக் கொள்வார்களா மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.