மாநகராட்சியில் மெகா மாற்றம் புதிய ஏ.இ.,க்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு
மதுரை: மதுரை மாநகராட்சி பணியமைப்பு, பொது நிர்வாகம், பொறியியல் பிரிவு உட்பட உதவிப் பொறியாளர் (ஏ.இ.,) முதல் தேர்ச்சி திறனற்ற அலுவலர்கள் வரை ஒரே நேரத்தில் 59 பேரை பணியிடமாற்றம் செய்து கமிஷனர் சித்ரா நடவடிக்கை மேற்கொண்டார். அதேநேரம் நேற்று புதிதாக பணியில் சேர்ந்த ஏ.இ.,க்களுக்கு உடனே வார்டு பணி ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்பு, கட்டட அனுமதி, ரோடுகள் பராமரிப்பு உள்ளிட்ட முக்கியப் பணிகளை பொறியியல் பிரிவு மேற்கொள்கிறது. தற்போது பெரியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இப்பிரிவில் கார்த்திகேயன் கமிஷனராக இருந்தபோது 2021ல் 'மெகா' பணியிடமாற்றம் செய்தார். அதன்பின் தற்போது 'மெகா இடமாற்ற'த்தில் 59 பேர் மாற்றப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 27 உதவி, தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு நேற்று பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி திறனற்ற நிலை 2 அலுவலர்களுக்கு தலா 3க்கும் மேற்பட்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதுவிமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு தலா ஒரு வார்டு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: மாநகராட்சியில் 7 ஏ.இ.,க்கள், 20 தொழில்நுட்ப உதவியாளர்கள், 10 உதவி நகரமைப்பு அலுவலர்கள், 11 சுகாதார ஆய்வாளர்கள், 1 வரைவாளர் என 49 பேர் நேற்று புதிதாக பணியேற்றனர். இதில் பொறியியல் பிரிவில் மட்டும் வார்டுகள் பணிகளை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிதாக பணியில் சேர்ந்த ஏ.இ., தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு இதுவரை சீனியர் பொறியாளர்களிடம் பயிற்சி பெற்ற பின் வார்டுகள் ஒதுக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பணியேற்ற முதல் நாளிலேயே வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றனர்.