| ADDED : டிச 25, 2025 06:27 AM
மதுரை: கன்னியாகுமரியில் சட்ட விரோத கடைகளை அகற்றக் கோரிய வழக்கில், அறநிலையத் துறை, நகராட்சி ஆணையர், எஸ்.பி., கூட்டு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்ட பாதுகாப்பு இயக்கம் தாக்கல் செய்த மனுவில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், வணிக நோக்கத்திற்காக குத்தகைக்கு விடுவதை தடுக்கவும் உத்தரவிட கோரியிருந்தது. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கன்னியாகுமரி பகுதியின் அமைதி, துாய்மையை பேணுவது உள்ளாட்சி அமைப்புகள், கோவில் நிர்வாகத்தின் பொறுப்பு. இந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்த நீதிமன்ற ம் ஏற்கனவே உத்தர விட்டுள்ளது. ஆனால் இன்று வரை அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. கன்னியாகுமரி நகராட்சி கமிஷனர், அறநிலையத் துறை இணை கமிஷனர் இணைந்து, எஸ்.பி., உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் ஜன., 19ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட னர்.