எல்லீஸ் நகர், மாட்டுத்தாவணியில் அனுமதியற்ற கடைகளை அகற்ற உத்தரவு
மதுரை: மதுரை எல்லீஸ் நகரில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள மற்றும் மாட்டுத்தாவணியில் அனுமதியற்ற கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை எல்லீஸ் நகரில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடைகளை அகற்றக்கோரி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மதுரை சந்திரபோஸ்,'மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிலிருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைவரை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் அகற்ற வேண்டும். பின் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள்மாநகராட்சி விற்பனைக்குழுவை அணுகலாம். தகுதியானவர்களுக்கு மாற்று இடங்களை அதாவது இடம் இருப்பில் உள்ளதை பொறுத்து ஒதுக்கீடு செய்ய குழு பரிசீலிக்க வேண்டும். இதை 12 வாரங்களில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.