உதயகுமார் தாயார் படம் திறந்து மரியாதை செலுத்திய பழனிசாமி
பேரையூர், : பேரையூர் அருகே டி.குன்னத்துார் அம்மா கோயிலில், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாள் உருவப்படத்தை அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். உதயகுமாரின் தாயாரும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான மீனா அம்மாள் சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். செப். 3ம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அவரிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில் செப்.8ல் மீனாள் அம்மாள் இறந்தார். அவரது உடல் டி. குன்னத்துார் அம்மா கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு டி.குன்னத்துார் வந்த பழனிச்சாமி, மீனாள் அம்மா உருவப் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். உதயகுமாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இதில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லுார் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ க்கள் டாக்டர் சரவணன், எஸ். எஸ் சரவணன், மகேந்திரன், தமிழரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.