விதைப்பு நெல் வழங்கிய மக்கள் திருவாதவூரில் நல்லிணக்க விழா
மேலுார்: திருவாதவூரில் உள்ள புருஷாமிருகத்திற்கு கருப்பு சாத்து நிகழ்ச்சி, மதநல்லிணக்க விழாவுக்காக பொதுமக்களிடம் விதைப்பு (நெல்) வசூலிக்கப்பட்டது. திருவாதவூர் சோழப்பேரேறி கண்மாயில் உள்ள புருஷாமிருகத்திற்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் கருப்பு சாத்தும் நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்க விழா கொண்டாடப்படும். இத்திருவிழாவுக்கு திருவாதவூர் கிராமத்தில் தொண்டூழியம் புரிவோர், தப்பு தாளத்துடன் நேற்று உலகுபிச்சன்பட்டி, பலையூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் வீடு வீடாக சென்று விதைப்பு (நெல்) வசூலித்தனர். மக்களிடம் வசூலித்த நெல்லை விற்று கிடைக்கும் பணத்தை கொண்டு கிடா, பூஜை பொருட்கள் வாங்குவர். செப்.27ல் கிராமத்து மந்தையில் இருந்து மக்கள் ஊர்வல மாக சோழப்பேரேறி கண்மாய்க்கு செல்வர். அங்கு தேங்காயை நெருப்பில் சுட்டு, மாவு போல் அரைத்து புருஷா மிருகத்திற்கு கருப்பு சாத்தும் நிகழ்ச்சியை நடத்துவர். செப்.28 ல் கிராமம் சார்பில் வாங்கிய கிடா பலி கொடுக்கப்பட்டு, இறைச்சியை ஹிந்துக்கள் மந்தையிலும், முஸ் லிம்கள் பள்ளிவாசலிலும் கந்திரி கொடுப்பர். தொடர்ந்து பொங்கல் வைக்கப்படும். ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக விழாவைக் கொண்டாடுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.